உத்திரபிரதேச மாநிலத்தில் மைகர் ராய்பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் விஜய் ரஸ்டோகி என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஆயிரக்கணக்கில் தன்னுடைய வங்கிக் கணக்கில் வரவு செலவு வைப்பார். இந்நிலையில் விஜய் ரஸ்டோகி வங்கி கணக்கில் திடீரென 172 கோடி டெபாசிட் ஆகியுள்ளது. இந்த பணம் எப்படி வந்தது என்பது விஜய் ரஸ்டோகிக்கு தெரியவில்லை. இந்த சம்பவத்தால் கடந்த ஒரு மாத காலமாகவே விஜய் ரஸ்டோக்கியும் அவர் குடும்பத்தினரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இவருடைய வீட்டிற்கு காவல்துறையினரும் வருமானவரித்துறையினரும் அடிக்கடி வந்து சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய பான் கார்டு மற்றும் பிற ஆவணங்களை பயன்படுத்தி யாரோ தன் பெயரில் போலி வங்கி கணக்கு திறந்துள்ளதாக விஜய் ரஸ்டோகி கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விசாரணை முழுமையாக முடிவடைந்தால்தான் உண்மை என்னவென்று தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.