தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த 12-ஆம் தேதி தங்களுடைய இயந்திர படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் 3-வது கைது மற்றும் தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

இது தொடர்பாக ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளோம். ஆனால் பிரச்சனை இதுவரை தீரவில்லை. எனவே உடனடியாக நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு நம்முடைய மீனவர்களின் பாரம்பரியத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு அவர்கள் ஏற்கனவே பிடித்து வைத்துள்ள 102 மீன்பிடி படகுகளையும் தூதரக ரீதியில் மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பாக இலங்கை அரசிடம் பேசி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.