பாஜக தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்நீத் ராணா, இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத் தலைவர் தமக்கு 19 குழந்தைகள் இருப்பதாகக் கூறிய காணொளியைச் சுட்டிக்காட்டிப் பேசிய ராணா, இந்தியாவின் மக்கள் தொகை சமநிலையை மாற்றச் சதி நடப்பதாகக் குற்றம் சாட்டினார்.

 

அந்தத் தரப்பினர் பத்தொன்பது குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால், இந்துக்கள் ஏன் ஒரு குழந்தையோடு திருப்தி அடைய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், நாட்டின் அடையாளத்தைப் பாதுகாக்க இந்து குடும்பங்கள் தலா மூன்று முதல் நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அரசியல் ரீதியாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சாடிய நவ்நீத் ராணா, மும்பை மாநகராட்சித் தேர்தலுக்காக அவர் மேற்கொண்டு வரும் கூட்டணி முயற்சிகள் தோல்வியைச் சந்திக்கும் எனக் குறிப்பிட்டார். உத்தவ் தாக்கரேவின் இயலாமையே இதுபோன்ற கூட்டணிகளுக்குக் காரணம் என்றும், இதனால் வரவிருக்கும் தேர்தலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

ஏற்கனவே ஹைதராபாத் பொதுக்கூட்டத்தில் ஓவைசி சகோதரர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதினைந்து நொடிகள் அவகாசம் கேட்டுக் சர்ச்சையில் சிக்கிய நவ்நீத் ராணா, தற்போது மக்கள் தொகை குறித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.