ராஜஸ்தானின் பிலாவேசர் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த லாரியின் மேல் அமர்ந்து சென்ற நபர், எதிர்பாராத விதமாக 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பியைத் தொட்டதில் உடல் கருகிய சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே அதிர வைத்துள்ளது. இந்த கொடூரமான விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாரி நகர்ந்து கொண்டிருந்தபோது, மேலே இருந்த அந்த நபர் மின்சாரக் கம்பியைத் தொட்ட அடுத்த நொடி, ஒரு பிரம்மாண்டமான தீப்பிழம்புடன் வெள்ளை மற்றும் சாம்பல் நிறப் புகை அவரைச் சூழ்ந்து கொண்டது. மின்சாரம் தாக்கிய வேகத்தில் அந்த நபரின் உடல் அப்படியே விறைத்துப் போய், ஆடைகள் தீப்பற்றி எரியும் காட்சி பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.

​உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 11,000 வோல்ட் மின்சாரம் பாய்ந்ததால் அவரது உடல் உட்புற திசுக்கள் வரை பலத்த சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் இது போன்ற மின்விபத்துகளால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோவதாகப் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் ஒருபுறம் ஆபத்து என்றால், அஜாக்கிரதையாக வாகனங்களின் மேல் அமர்ந்து செல்வது எமனை நேரில் அழைப்பதற்குச் சமம் என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து எச்சரித்து வருகின்றனர்.