மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரைப் போக்குவரத்துப் போலீஸ் ஆய்வாளர் திடீரென வழிமறித்து நிறுத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவில், வேகமாக வந்த பைக் சவாரியாளரை நிறுத்த போலீஸ் அதிகாரி திடீரென்று பாதையின் நடுவே வந்து நின்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் நிலைதடுமாறிய அந்த நபர், வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பானில் மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அவரது தற்போதைய நிலை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

“>

மேலும் போக்குவரத்துக் காவலரின் இந்த அதிரடி நடவடிக்கை இணையத்தில் கடுமையான விமர்சனங்களையும் பொதுமக்களின் கண்டனங்களையும் குவித்து வருகிறது. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதும் மட்டுமே போக்குவரத்துப் போலீசாரின் சட்டப்பூர்வமான கடமையாகும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் வாகன ஓட்டிகளை ஆபத்தான முறையில் வழிமறித்து, அவர்களுக்குக் காயம் ஏற்படும் வகையில் உடலளவில் தண்டிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை என்றும், இது மனித உரிமை மீறல் என்றும் நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.