மத்தியபிரதேசம் இந்தூர் மாநிலத்தில் ஸ்கூட்டரின் பஞ்சரை சரிசெய்ய நடந்து சென்ற 27 வயது இளைஞர் ஒருவர், திடீரென சாலையில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பர்தேஷிபுரா பகுதியில் திங்கள்கிழமை காலை நடந்தது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. சிசிடிவியில், வினித் குசேகர் என அடையாளம் காணப்பட்ட இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தை தள்ளிகொண்டு நடந்து செல்வது, பின்னர் திடீரென கட்டுப்பாட்டிழந்து சாலையில் வீழ்வது பதிவாகியுள்ளது.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உண்மையான மரண காரணத்தை அறிய போலீசார் பிரேத பரிசோதனை நடத்தினர். இந்தூரின் ஜந்தா குவாட்டர் பகுதியைச் சேர்ந்த வினித் குசேகர் காலை 11.30 மணியளவில் பஞ்சரை சரிசெய்ய வீட்டிலிருந்து புறப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பிங்க் ஃப்ளவர் ஹெச்.எஸ் பள்ளி அருகில் சரிந்து விழுவதற்கு முன்பு அவர் சுமார் 300 மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

வினித் தனது தந்தையுடன் சேர்ந்து சொத்து பரிவர்த்தனை தொழிலில் ஈடுபட்டிருந்தார். இதற்கு முன்பு இதயம் தொடர்பான எந்தவொரு மருத்துவ பிரச்சினையும் இல்லையென அவரது தந்தை சஞ்சய் குசேகர் தெரிவித்தார். இந்த இளைஞர் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். மேலும் சமீப காலமாக இளைய வைத்தியர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.