சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரி நீச்சல் குளத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேளச்சேரி நீச்சல் குளத்தின் வளாகத்தில் சர்வதேச போட்டிகள் நடத்துகின்ற விதமாக 50 மீட்டர் நீச்சல்குளம், பயிற்சி பெறும் விதமாக 25 மீட்டர் நீச்சல் குளம் மற்றும் டிரைவிங் நீச்சல்குளம் போன்றவை இருக்கிறது.

அதேபோல் சிந்தடிக் இறகு பந்து கூடம், ஜிம்னாஸ்டிக் அரங்கம் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் போன்றவையும் இருக்கிறது. இங்கு தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் நீச்சல் இறகுப்பந்து மற்றும் ஜிம் உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீச்சல் குளத்திற்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்ற உபகரணங்கள் அமைக்கும் பணியினை ஆய்வு செய்து பார்வையாளர்கள் அமரும் இடம், ஜிம்னாஸ்டிக் அரங்கம், உடற்பயிற்சி மையம், இறகு பந்து கூடம் மற்றும் கழிப்பறை வசதிகளை பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சிகள் மேற்கொள்ள கூடுதலாக தேவைப்படும் வசதிகள் பற்றி கேட்டறிந்து பார்வையாளர்கள் அமரும் இடம் மற்றும் கழிவறை கட்டமைப்பு வசதிகளை சரியான முறையில் பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.