இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர், இந்திய நேரப்படி இன்று இரவு 10:00 மணிக்கு தொடங்குகிறது. சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்ததால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த இங்கிலாந்து தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியப் படை களம் இறங்குகிறது. அயர்லாந்து தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமாவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக, ஜூன் 30 அன்று நடந்த வலைப்பயிற்சியில் வைபவ் சூர்யவன்ஷி தீவிரமாகப் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

 

சீனியர் வீரர் சஞ்சு சாம்சனுக்கு முன்பாகவே வலைப்பயிற்சிக்கு வந்த வைபவ், வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டையும் பிரித்து மேய்ந்தார். குறிப்பாக, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பந்துகளை எதிர்கொண்டு சில அசாத்தியமான ஷாட்டுகளை ஆடி அசத்தினார். அர்ஷ்தீப் சிங்கின் ஓவரில் வைபவ் ஆடிய ஒரு ஷாட்டைப் பார்த்து மிரண்டுபோன ஹர்ஷித் ராணா, கைகளைத் தட்டி அவரைப் பாராட்டினார்.

 

தொடர்ந்து ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சுழற்பந்தையும் அவர் எதிர்கொண்டார். இந்த நெட்ஸ் பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், வைபவின் பேட்டிங் திறமையைப் பார்த்து வியந்து அவருக்கு ‘தம்ப்ஸ்-அப்’ காட்டி வாழ்த்தினார். மேலும், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் வைபவின் முதுகில் தட்டிக்கொடுத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். பயிற்சியாளர்கள் இருவரும் வைபவின் ஆட்டத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் அவர் களம் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.