இன்றைய காலத்தில் வாடகை வீட்டிலிருந்து வெளியேறும்போது பாதுகாப்பு வைப்புத் தொகையை (செக்யூரிட்டி டெபாசிட்) திரும்பப் பெறுவது பெரிய சவாலாக இருக்கிறது. பல வாடகைதாரர்கள், வீட்டு உரிமையாளர்கள் பணத்தை திருப்பித் தருவதை தாமதப்படுத்துவதாகவோ அல்லது தேவையற்ற காரணங்களைக் கூறி பணத்தில் பெரும் பகுதியை கழித்துவிடுவதாகவோ புலம்புகின்றனர். ஆனால், பெங்களூருவில் ஒரு வாடகைதாரர் தனது 2.6 லட்ச ரூபாய் வைப்புத் தொகையை முழுமையாக மீட்டெடுத்து, தைரியமும் சரியான நடவடிக்கைகளும் இருந்தால் நியாயம் கிடைக்கும் என்பதை நிரூபித்துள்ளார். இந்த முழு விவகாரமும் ஒரு வைரலான ரெட்டிட் பதிவு மூலம் வெளியாகியுள்ளது. அந்தப் பதிவில், வாடகைதாரர் எப்படி வீட்டு உரிமையாளரை எதிர்கொண்டு, முழு பணத்தையும் திரும்பப் பெற்றார் என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் இந்த வாடகைதாரர் பெங்களூருவின் பிரபலமான பகுதியில் 3.5 BHK பிளாட்டை மாதம் 55,000 ரூபாய் வாடகைக்கு எடுத்தார். ஆனால், அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, வீடுகளுக்கு தேவை அதிகரித்தவுடன், உரிமையாளர் வாடகையை மாதம் 78,000 ரூபாயாக உயர்த்தினார். இந்த உயர்வு பரவாயில்லை என்று வாடகைதாரர் ஒப்புக்கொண்டாலும், இவ்வளவு அதிக வாடகையை செலுத்த முடியாததால், ஒப்பந்தப்படி 45 நாட்கள் முன்னதாக நோட்டீஸ் கொடுத்து வீட்டை காலி செய்ய முடிவு செய்தார். ஆனால், வீட்டைக் காலி செய்ய ஒரு வாரத்திற்கு முன்பு, உரிமையாளர் பலவித காரணங்களைக் கூறி வைப்புத் தொகையில் கழிவு செய்யப் போவதாகக் கூறினார். 40,000 ரூபாய் பெயின்டிங்கிற்கும், 7,000 ரூபாய் குளியலறை சுத்தம் செய்வதற்கும், மேலும் சில சேதங்களைச் சுட்டிக்காட்டி கூடுதல் பணம் கழிக்கப்படும் என்று அறிவித்தார்.

மூன்று நாட்கள் மீதமிருக்கும்போது, மேலும் 38,000 ரூபாய் ‘சாதாரண தேய்மானத்திற்கு’ என்று கழிக்கப்படும் என்று உரிமையாளர் கூறினார். இதனால், உரிமையாளர் பணத்தை திருப்பித் தர விரும்பவில்லை என்பதையும், பொய்யான ஆவணங்களை உருவாக்கி சட்டப் போராட்டத்திற்கு தயாராக இருப்பதையும் வாடகைதாரர் புரிந்துகொண்டார். வீட்டைக் காலி செய்த பிறகு, வாடகைதாரர் பலமுறை தொடர்பு கொண்டும், 40 நாட்கள் கழித்தும் ஒரு பைசா கூட திரும்ப வரவில்லை. உரிமையாளரின் தொடர்ச்சியான தாமதமும், நியாயமற்ற கழிவுகளும் அவரை விரக்தியடையச் செய்தன. ஆனால், ஆராய்ந்தபோது, உரிமையாளர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பது தெரியவந்தது. இதைப் பயன்படுத்தி, வாடகைதாரர் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிமையாளர் தனது ராணுவப் பின்னணியை தவறாகப் பயன்படுத்துவதாக புகார் அளித்தார்.

இதன் விளைவாக, சில நாட்களில் உரிமையாளர் எந்தவித கழிவும் இல்லாமல் முழு 2.6 லட்ச ரூபாயையும் திருப்பிக் கொடுத்தார். இந்த சம்பவம் ரெட்டிட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பலர் இதை மற்ற வாடகைதாரர்களுக்கு ஒரு பாடமாகக் கருதி, இப்படிப்பட்ட உரிமையாளர்களை பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும் என்று கூறினர். ஒரு பயனர், “நியாயம் கிடைத்தது மகிழ்ச்சி; சட்ட வழி நீண்டதாகவும், பலனற்றதாகவும் இருந்திருக்கும்” என்று எழுதினார். மற்றொருவர், வைப்புத் தொகை கழிவுகளுக்கு தெளிவான, சட்டபூர்வமான விதிமுறைகள் தேவை என்று கூறினார். இந்தக் சம்பவம், இந்திய நகரங்களில் வாடகைத் துறையில் உள்ள ஒழுங்கீனங்களை வெளிப்படுத்துகிறது, குறிப்பாக பெரிய நகரங்களில் அதிக வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டு, அதை திருப்பித் தருவதற்கு உறுதியான விதிகள் இல்லாத நிலையை சுட்டிக்காட்டுகிறது.