வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திர இரவு விருந்து நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

இந்தச் சமயம் அதிபர் டிரம்புடன் அவரது மனைவி மெலானியா டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோரும் அங்கிருந்தனர். திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன், பாதுகாப்புப் படையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு டிரம்பையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்திய கலிபோர்னியாவைச் சேர்ந்த 30 வயது நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு எஃப்பிஐ (FBI) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

“>

பாதுகாப்பு வளையத்தையும் மீறி துப்பாக்கி ஏந்திய நபர் உள்ளே நுழைந்தது மிகப்பெரிய பாதுகாப்புக் குறைபாடாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஹோட்டலில் அமெரிக்க அதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வரலாறும் இருப்பதால், இந்தச் சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தனது ரகசிய சேவை (Secret Service) பிரிவினரைப் பாராட்டியுள்ள டிரம்ப், தான் பாதுகாப்பாக இருப்பதாகத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் டிரம்பைக் குறிவைத்து நடத்தப்பட்டதா அல்லது இதன் பின்னணியில் உள்ள சதி என்ன என்பது குறித்துப் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இதனால் ரத்து செய்யப்பட்ட இந்த இரவு விருந்து நிகழ்ச்சி, மீண்டும் 30 நாட்களுக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.