விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்னெத்தும், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் இன்று சென்னை மெரினா சாலையில் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் அவர்களின் மீது தாக்குதல் நடத்தியும் வலுக்கட்டாயப்படுத்தியும் கைது செய்திருக்கும் இந்த விடியா திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவிமடுக்க மறுக்கும் இந்த அரசு இருந்தென்ன இல்லை என்றால் என்ன? தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து வரும் விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாள்வதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது என இந்த அரசை மீண்டும் ஒரு முறை கண்டிப்பதுடன், இனியும் விவசாய சங்கங்கள் மீது இத்தகைய அடக்குமுறையை கையாண்டால் இந்த அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.