விழுப்புரம் திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணியாற்றும் விதமாக 31 கோடி ரூபாய் செலவில் 63,000 சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைட்டில் பூங்காவை முதல்வர் நேற்று காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த திட்டத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும் என அரசு தெரிவித்துள்ளது. முத்தமிழறிஞர் கலைஞரின் தொலைநோக்கு பார்வையில் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்ட டைடல் பூங்கா தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட அடித்தளமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் தற்போது 31 கோடி ரூபாய் செலவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயர் அழுத்த மும்முனை மின் இணைப்பு, மின் தூக்கிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு, கட்டட மேலாண்மை, மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை, 24 மணி நேரமும் பாதுகாப்பு, உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் என பல நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்து வைத்துள்ள நிலையில் இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்று அரசு உறுதி அளித்துள்ளது.