நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது என்றும் நம் விரலை வைத்து நம் கண்ணை குத்தி விடுவார்கள் என்றும் பேசி இருந்தார். மேலும் தான் அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசிய நிலையில் விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மாமன்னன் புரோமோஷனில் ஈடுபட்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் விஜய் அரசியல் நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘அவர் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக அறிவிக்கட்டும், பின் தன் கொள்கையை சொல்லட்டும். அதன் பிறகே அவரை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்பதை சொல்ல முடியும்’ என்றார்.