விஜயதரணியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில், பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் விஜயதரணி, கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த  நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் விஜயதரணியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்பி விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “திருமதி. விஜயதரணி அவர்கள் மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு‌ பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.

இதனிடையே விஜயதரணி மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்..மேலும் விஜயதரணியால் கட்சிக்கும் எந்த பலனும் இல்லை, நாட்டுக்கும் எந்த பலனும் இல்லை. பாஜக ஆட்களை பிடிக்கும் வேளையில் எவ்வளவு இறங்கினாலும் தமிழ்நாட்டில் அவர்களின் வேலை எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் சமூக நீதி பற்றி அறிந்தவர்கள், பாஜகவின் முயற்சி பலவீனமானவர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என அவர்தெரிவித்துள்ளார்.