பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடித்து வருகிறார். இவர் பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தாதா சாகேப் விருதை பிரபல நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ஆகியோர் சிறந்த நடிகர் மற்றும் நடிகைகள் பிரிவில் பெற்றிருந்தனர். இதற்காக நடிகை கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சினிமா வாரிசுகள் என்பதால் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதை பெறுவதற்கு அவர்களுக்கு மட்டும்தான் தகுதி இருக்கிறதா. சிறந்த நடிகருக்கான விருதை காந்தாரா நடிகர் ரிஷப் செட்டிக்கும் சிறந்த நடிகைக்கான விருதை மிருணாள் தாக்கூருக்கும் கொடுத்திருக்கலாம். சிறந்த படத்துக்கான விருதை காந்தாராவுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருதை ராஜமவுலிக்கும் கொடுத்து சிறப்பித்திருக்கலாம். ஹிந்தி சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் ஓயவில்லை. மேலும் சினிமா பின்புறத்தில் இருந்து வந்தவர்களுக்கு விருது வழங்கி பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.