சமூக ஊடகங்களில் விலங்குகளுக்கிடையேயான ஆச்சரியமான சம்பவங்களை பதிவு செய்த காணொளிகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், பூனை மற்றும் பாம்பு இடையே ஏற்பட்ட மோதலைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

29 விநாடிகள் நீளமுடைய இந்த காணொளியில், ஒரு பூனை எந்தத் தூண்டுதலும் இன்றி பாம்பை நோக்கி நெருங்கி, அதை முதலில் மோப்பம் பிடித்து பின்னர் கடிப்பது பதிவாகியுள்ளது. இதனால் பதற்றமடைந்த பாம்பு, தற்காப்புக்காக பூனையை தாக்க முயற்சிக்கிறது.

ஆனால் பாம்பின் தாக்குதலுக்கும் அஞ்சாத பூனை, மீண்டும் மீண்டும் பாம்பை கடித்து துன்புறுத்துவது காணொளியில் பதிவாகியுள்ளது. இரு விலங்குகளும் யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத நிலையில், இறுதியில் பூனையின் தீவிர தாக்குதலால் பாம்பு பின்வாங்கிச் செல்லும் காட்சியுடன் காணொளி முடிகிறது.

 

இந்த காணொளியை சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’-இல் @NatureNexus4321 என்ற கணக்கில் பகிர்ந்துள்ளனர். இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த காணொளியை பார்த்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் லைக் செய்து கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலர் “தன்னம்பிக்கை இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம்; ஆனால் இவ்வளவு ஆபத்தான அளவிற்கு அல்ல” என குறிப்பிட்டுள்ளனர். மற்றொருவர், “பாம்புடன் மோதுவது உயிருக்கு மிக ஆபத்தானது” என எச்சரித்துள்ளார். மேலும் பலர், “பூனைகள் சிங்கக் குடும்பத்தைச் சேர்ந்தவை; பயம் அவற்றின் இயல்பில் இல்லை” என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த காணொளி, விலங்குகளின் இயல்பான தைரியமும் எதிர்பாராத நடத்தை முறைகளும் குறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.