திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்லம்மாள் என்பவர் கேன்டீன் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக செல்லம்மாள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது 19 வயது மதிக்கத்தக்க பெண் செல்லம்மாளிடம் சிறிது தயக்கத்துடன் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது கையில் வைத்திருந்த குழந்தையை செல்லம்மாளிடம் கொடுத்து கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள்; நான் பாத்ரூம் சென்று வருகிறேன் என கூறியுள்ளார். காலை 8.30 மணிக்கு சென்ற அந்த இளம்பெண் 11.30 மணி வரை திரும்ப வரவில்லை.

இதுகுறித்து செல்லம்மாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரிடம் கூறியுள்ளார். அவர்கள் செல்லம்மாளை பேருந்து நிலையத்தில் இருக்கும் தெற்கு புற காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை அந்த இளம்பெண் விட்டு சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கு இடையே ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை பாதுகாப்பாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.