மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டெல்லி அலுவலகத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில், அவர் தரதரவென இழுக்கப்படுவதைக் கண்டு ஆவேசமடைந்த மஹுவா மொய்த்ரா, “நீங்கள் வங்காளப் புலியால் வேட்டையாடப்படுவீர்கள்” என்று அதிகாரிகளை நோக்கி மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.

“>

மேற்கு வங்கத்திற்கான மத்திய நிதி ஒதுக்கீடு மற்றும் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அரசின் அடக்குமுறைகளுக்குத் தான் அஞ்சப்போவதில்லை என்பதை அவர் தனது வீரமான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தங்களை அராஜகமான முறையில் கையாண்ட டெல்லி காவல்துறையின் செயலை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வங்காளத்தின் குரலை யாராலும் ஒடுக்கிவிட முடியாது என்று முழங்கிய அவர், பாஜக அரசு தன்னை மிரட்டப் பார்ப்பதாகவும், ஆனால் அத்தகைய மிரட்டல்கள் ஒருபோதும் பலிக்காது என்றும் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.  போராட்டக்களத்தில் ஒரு சிங்கப் பெண்ணாக நின்று அவர் வெளிப்படுத்திய இந்த பதிலடி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.