பீகார் மாநிலத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆவதற்காக இரண்டு இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து செய்த ஆபத்தான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவுத்நகர் பாலத்தின் நடுவே அதிவேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தபோது, இந்த இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு வீடியோ எடுத்துள்ளனர்.

இந்நிலையில் லாரி ஓட்டுநர் கடைசி நேரத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு பிரேக் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இவ்வளவு ஆபத்தான சூழலிலும், அந்த இளைஞர்கள் அச்சமின்றி கேமராவைப் பார்த்து கையாட்டி வெற்றிக் குறியைக் காட்டியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

“>

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதை அடுத்து, பொதுமக்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ‘லைக்’குகளைப் பெறுவதற்காகத் தங்களின் உயிரையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை என்று அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அந்த இளைஞர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லாரி ஓட்டுநர் மற்றும் இதர வாகன ஓட்டிகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் பீகார் காவல்துறைக்குக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.