திமுக அரசு வழங்கும் 8000 கூப்பன் தனக்கு வழங்கப்படவில்லை என கேட்ட பெண்ணை ஆபாசமாக பேசி அடித்ததால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை, டிடிவி தினகரன் என தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்தினால் கொதித்தெளிந்துள்ளனர். இது தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது என்று பதிவிட்டுள்ளார்.

 

இதேபோன்று டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவின் வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை வழங்குவதில் ஏற்பட்ட வாய்த் தகறாரில் திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன என்று பதிவிட்டுள்ளார்.