இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்..

தமிழகத்தில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கி மக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். இதனிடையே அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் களத்திற்கு சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். தற்போது தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தும் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் விடியா திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. நிர்வாகத் திறனற்ற “திமுக மாடல் ரோடு”, “இரண்டரை ஆண்டு கால விடியா திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி” என்பது போல் இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது.

விடியா திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு, இந்த சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத மழைநீர் வடிகால் திட்டமும் அதனால் பரவும் டெங்கு உட்பட பல பருவ மழைக்கால நோய்களால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதே சாட்சி. மக்களின் துயர் துடைக்க விடியா அரசே நடவடிக்கை எடுக்கும் என்று நம்பாமல், ஆங்காங்கே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுக என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.