டெல்லி மெட்ரோவில் அரங்கேறும் விசித்திரமான செயல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக, மெட்ரோ ரயிலின் கதவு அருகே நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை, பின்னால் இருந்த மற்றொரு பெண் வேண்டுமென்றே உதைத்து வெளியே தள்ளுகிறார். கதவு திறந்ததும் அந்த இளம்பெண் நடைமேடையில் (Platform) நிலைதடுமாறி விழுகிறார். இதைப் பார்த்த அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், உதைத்த பெண் விழுந்தவரைப் பார்த்துச் சிரிக்க, கீழே விழுந்த பெண்ணும் எழுந்து வந்து சிரித்தபடியே ரயிலுக்குள் ஏறியபோதுதான் தெரிந்தது, இது வெறும் ரீல்ஸுக்காக எடுக்கப்பட்ட ஒரு நாடகம் என்று.

​வெறும் ‘லைக்’குகளுக்காக மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, இணையத்தில் பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. “மெட்ரோ ரயில் என்பது பயணம் செய்வதற்குத்தானே தவிர, இப்படி ரீல்ஸ் எடுத்து ரகளை செய்வதற்கு அல்ல” என நெட்டிசன்கள் பலரும் கொதிப்படைந்து வருகின்றனர். ஏற்கனவே டெல்லி மெட்ரோ நிர்வாகம் இதுபோன்ற செயல்களுக்குத் தடை விதித்திருந்தாலும், வைரல் மோகத்தில் இருக்கும் இளைஞர்கள் தொடர்ந்து இதுபோன்ற ஆபத்தான மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டு வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.