விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. முன்பே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறியிருப்பதாவது, “ரசிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். இது வெறும் சினிமா மட்டும் தான். உயிரை விடும் அளவுக்கு இதற்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை. மகிழ்ச்சியாக படத்தை பார்த்து விட்டு பத்திரமாக வீட்டிற்கு சென்றாலே போதும். உயிரே போகும் அளவுக்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது தான் எனது கருத்து” என்று அவர் கூறினார்.