கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைக் குடும்பம் ஒன்று காட்டின் அடர் பகுதியில் நிம்மதியாகத் தூங்கி ஓய்வெடுக்கும் நெஞ்சை உருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச வன தினத்தை முன்னிட்டு, தமிழக வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் தனது எக்ஸ்  தளத்தில் இந்த அழகிய காட்சியைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில், குட்டி யானை ஒன்று தனது குடும்பத்தினர் மீது கால்களைப் போட்டுக்கொண்டு மிகுந்த பாதுகாப்புடனும், அன்புடனும் உறங்கும் காட்சி பார்ப்பவர்களைப் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான ஆனைமலை, முதுமலை போன்ற இடங்கள் யானைகளின் இயற்கையான வாழ்விடங்களாகத் திகழ்கின்றன.

“>

இந்நிலையில் யானைகளின் உலகில் குடும்பமே பிரதானமானது என்பதையும், அவை காடுகளுக்குள் எவ்வளவு நிம்மதியாக வாழ்கின்றன என்பதையும் இந்த வீடியோ பறைசாற்றுகிறது. காடுகளின் அமைதியையும், வனவிலங்குகளின் வாழ்வியல் அழகையும் உணர்த்தும் இந்த காணொளி, சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று, வனப் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.