மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் பல்தா தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM), பாஜகவின் தாமரை சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை அமுக்க முடியாதபடி மர்ம நபர்கள் டேப் ஒட்டி மறைத்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பான வீடியோவை பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பல்தா தொகுதியின் பூத் எண் 144, 189 மற்றும் 177 ஆகிய இடங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே இத்தகைய வேலையில் ஈடுபட்டதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் மோதல் வெடித்தது. கூட்டத்தை கலைக்க மத்திய பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

இந்த குளறுபடிகள் நடந்த பூத்களில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜக தேர்தல் ஆணையத்திடம் பிடிவாதமாக கோரிக்கை வைத்துள்ளது. தேர்தல் ஆணையமும் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளதால் பல்தா தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.