பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகிய “தாம்தூம்” திரைப்படத்தின் வாயிலாக பிரபலமானவர் கங்கனா ரனாவத். இதையடுத்து தமிழ் உட்பட பல மொழிப் படங்களில் நடித்து வந்தார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று கதையான “தலைவி” படத்தில் நடித்ததன் வாயிலாக தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதற்கிடையில் பாஜகவிற்கு ஆதரவாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

இதன் காரணமாக இவருக்கும், உத்தவ் தாக்கரே தலையிலான அப்போதையை மராட்டிய அரசுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது.

இத்தேர்தல் முடிவுகள் குறித்து கங்கனா ரனாவத் பதிவிட்ட கருத்துகளானது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கை சென்ற 2021ம் வருடம் மே மாதம் நிரந்தரமாக முடக்கி டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின் அவரின் டுவிட்டர் கணக்கு முடக்கம் ரத்துசெய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.