மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடலா (Wadala) பகுதியில், எந்தவொரு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சிறுவர்களைக் கொண்டு மிகவும் அசுத்தமான சாக்கடை மற்றும் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்ய வைத்த நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பையும் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

த்ருப்தி கார்க் (Trupti Garg) என்ற எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பயனர் பகிர்ந்துள்ள இந்த வைரல் வீடியோவில், சிறுவர்கள் சிலர் தங்களின் கைகளில் கிளவுஸ் (கையுறை), கால்களில் பூட்ஸ் போன்ற எந்தவொரு தற்காப்பு கவசங்களும் இல்லாமல், வெறும் பாதுகாப்பு ஜாக்கெட்டை மட்டுமே அணிந்து கொண்டு குப்பைகளும் அழுக்குகளும் நிறைந்த சாக்கடை நீரில் இறங்கி வேலை செய்வது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.

அந்தப் பிஞ்சுச் சிறுவர்கள் வெறும் குச்சிகளையும், தங்களது வெறும் கைகளையும் பயன்படுத்தி அசுத்தமான கழிவுகளை அள்ளும் இந்த அவலம், மும்பையில் இன்னும் ஒழியாத குழந்தை தொழிலாளர் முறை மற்றும் பாதுகாப்பற்ற பணிச்சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) மூலம் கோடி கோடியாகப் பணம் பெற்றுக்கொண்டு சிவில் வேலைகளை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் (Contractors), நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் தங்களது லாபத்திற்காக மனித உயிர்களை, அதுவும் சிறுவர்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணத்தைச் சேமிப்பதாக சமூக ஆர்வலர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சட்டவிரோதமான இந்தச் செயலில் ஈடுபட்ட கான்ட்ராக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மும்பை மேயர் ரிது தாவ்டே ஆகியோருக்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த வடலா சாக்கடை விவகார வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில்  ட்ரெண்டாகி வருகிறது.