
தமிழகத்தில் தற்போது 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் வீட்டு பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், வழிபாட்டுதலங்கள்,கைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 100 யூனிட்டுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கு அதிகமான பயனாளிகள் 100 யூனிட்டுக்கு குறைவாகவே மின்சாரத்தை பயன்படுத்துவதால் அவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மின்கட்டண உயர்வு குறித்து தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய மின் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மின் கட்டணத்தை திருத்த வேண்டும் என்பது மத்திய அரசின் முன் நிபந்தனையாகும். விநியோக முறையை வலுப்படுத்த நிதியை பெற ஆண்டுதோறும் கட்டணத்தை திருத்த நிபந்தனை விதித்ததாலேயே கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.