ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் இந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய முடிவு செய்து 30 வயது வாலிபர் ஒருவருடன் திருமணம் பேச்சு வார்த்தை நடத்தி இன்று திருமணம் நடைபெற இறந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மருதாணி வாங்கி வருவதாக வீட்டில் இருந்து வெளியேறிய பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடிவிட்டு இறுதியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனிடையே மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த பெண் தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை. அதனால் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறியுள்ளார். காரணம் கேட்டபோது தனது தோழிகளுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் தனக்கும் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அப்போது போலீசார் வேறு யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு நான் யாரையும் காதலிக்கவில்லை வேறு மாப்பிள்ளையை பெற்றோர் காண்பித்தால் திருமணம் செய்து கொள்ள தயார் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை சமாதானம் செய்து பெற்றோருடம் செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டதால் அரசு பெண்கள் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.