ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்நாட்டு ரசிகர் ஒருவர், தனது வீட்டில் இருந்த தொலைக்காட்சியை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த  போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷனின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

பாகிஸ்தான் அணி சீட்டுக்கட்டாய் சரிவதைக் கண்ட ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இதில் ஒரு பாகிஸ்தான் ரசிகர், தனது அணியின் மோசமான ஆட்டத்தால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றார். விரக்தியில் கையில் கிடைத்த ஒரு பொருளைக் கொண்டு, போட்டி ஓடிக்கொண்டிருந்த தனது தொலைக்காட்சித் திரையை ஓங்கி அடித்து நொறுக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால், பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் வெறும் 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும்  இந்த வீடியோவைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், “விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்” என அறிவுறுத்தி வருகின்றனர். அதே சமயம், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ரசிகர்களின் உணர்வுகளோடு கலந்த ஒன்று என்பதையே இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.