
குஜராத்தில் 19 வயது கல்லூரி மாணவி கடந்த 14ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. 2000 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் லாரி திருட்டு மற்றும் சட்ட விரோத ஆயுத கடத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 14-ஆம் தேதி குஜராத்தின் மோதிவாடா கிராமத்திற்கு கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்றுள்ளார். அந்த மாணவி வீடு திரும்புவதற்காக ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது ரகுல் அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று தாக்கி அருகே இருந்த மாஞ்சோலைக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த மாணவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, ராகுல் ரயிலில் பயணம் செய்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். போலீசாரிடமிருந்து தப்பிக்க புலம்பெயர்ந்து சென்றபடியே இருந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் ராகுல் புனே- கன்னியாகுமரி ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி 60 வயது முதியவரை கத்தியால் குத்தி விட்டு பணம் மற்றும் உடைமைகளை திருடிவிட்டு தப்பி சென்றார். இதனையடுத்து மங்களூர் சிறப்பு எக்ஸ்பிரஸில் பெண் ஒருவரை கொலை செய்து பணம் செல்போனை திருடி சென்றார்.
கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி பெங்களூர் முர் தேஷ்வர் ரயிலில் சக பயணி ஒருவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். ராகுல் கைது செய்யப்பட்டதற்கு முந்தைய நாள் தெலுங்கானாவில் ரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை திருடி சென்றுள்ளார். ராகுல் மாற்று திறனாளி. அதனை பயன்படுத்தி கடந்த 35 நாட்களில் மட்டும் ஐந்து கொலைகளை செய்துள்ளார். எக்ஸ்பிரஸ் ரயில்களில் சுற்றியபடியே 5 மாநிலங்களில் ஐந்து கொலைகளை செய்துள்ளார். ராகுலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.