ஆடி மாத சிறப்பு பூஜைக்காக கடந்த ஜூலை 17 அன்று சபரிமலையில் சன்னிதானம் திறக்கப்பட்டு நேற்று வரை பூஜை நடைபெற்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலைக்கு வந்து சென்றனர். இந்நிலையில் இடைப்பட்ட நாட்களில் சபரிமலையில் பலத்த மழை பெய்ததால் பக்தர்கள் மலையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை தங்குவதற்காக காத்திருப்பு அறைகள் கட்டப்பட்டிருந்த நிலையிலும் அவை திறக்கப்படாததால் பக்தர்கள் நனைந்து கொண்டே நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையாகிய நிலையில் கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சபரிமலை சிறப்பு ஆணையருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.