மறைந்த முன்னாள் எம்எல்ஏ குக செல்வம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

திமுகவின் முன்னாள் எம்எல்ஏ கு.க  செல்வம் உடல் நல குறைவு காரணமாக இன்று  காலமானார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க செல்வம் உடல் நலக்குறைவால் காலமானார். திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க செல்வம் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான நிலையில், அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், “வெள்ளந்தியான உள்ளத்துக்கு சொந்தக்காரர் கு.க செல்வம் மறைவு செய்தி இடியாய் வந்திறங்கியது. கு.க செல்வத்தின் வெள்ளை உள்ளம் பழகும் எவருக்கும் கற்கண்டாய் இனிக்கும். கு.க செல்வம் மறைவு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு. சென்னை மேற்கு பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரர்  கு.க. செல்வத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த ஆறுதல்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ குக செல்வம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் கு.க செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். மேலும் ஸ்டாலினுடன் திமுக முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

2016 இல் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். 2021 இல் பாஜகவுடன் இணைந்த கு.க.செல்வம் மீண்டும் 2022-ல் திமுகவுக்கு திரும்பினார்.