திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் இருக்கும் கண்ணப்பன் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி தீயணைப்பு நிலையத்தில் உதவி அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி சரவணனின் மனைவி ஜெயலட்சுமி மண்ணெண்ணெய் பம்பு ஸ்டவ்வில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது தீ குபீரென பற்றி ஜெயலட்சுமியின் சேலையில் தீப்பிடித்து பம்பு ஸ்டவ் வெடித்ததாக தெரிகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால் தீ விபத்தில் ஜெயலக்ஷ்மி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையாடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.