உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வசீர்கஞ்ச் பகுதியில், ரமலான் மாலை தொழுகைக்குப் பிறகு சிறுவர்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஃபஹத் (என்கிற பிரின்ஸ், 22 வயது) என்ற இளைஞர், திடீரென 10 வயது சிறுவன் அப்துல் நசீரை ஆவேசமாக அணுகினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த சிறுவனின் கழுத்தையும் காலையும் பிடித்து அப்படியே மேலே தூக்கி, சிமெண்ட் தரையில் ஓங்கி அடித்தார். மல்யுத்த பாணியில் (Choke-slam) நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில், சிறுவன் தரையில் விழுந்து அசைவற்று கிடந்தான்.

எவ்வித கவலையும் இன்றி அங்கிருந்து மெதுவாக நடந்து சென்ற அந்த இளைஞர், பின்னர் சிறுவன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அவனை மீட்க முயல்வது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லக்னோ காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ காண்போரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.