உத்தரபிரதேசம் எட்டாவா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிரேம் கிஷோர் திவேதி என்பவரின் வீட்டில், 6 அடி நீளமுள்ள விஷமுள்ள கண்ணாடி நாகப்பாம்பு திடீரென நுழைந்தது. அந்தப் பாம்பு சுவரில் ஏறத் தயாரான போது, வீட்டில் இருந்த இரண்டு செல்ல நாய்கள் அதை கண்டன. உடனே அவை சத்தமாக குரைத்து, பாம்பைச் சூழ்ந்தன. நாய்களின் சத்தத்தைக் கேட்ட குடும்பத்தினர் சிசிடிவி மூலம் காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நாய்களின் செயலால், பாம்பு மேலே வராமல் தடுக்கப்பட்டது.
அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர் உடனடியாக வனவிலங்கு நிபுணர் டாக்டர் ஆஷிஷ் திரிபாதியை அழைத்தனர். சமூக வனத்துறையின் வழிகாட்டுதலின் கீழ், அவர் அந்த நாகப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு காட்டில் விட்டுவந்தார். “இது என் மீட்பு பணிகளில் இதுவரை பார்த்த மிகப்பெரிய ஆரோக்கியமான நாகப்பாம்பு. சுமார் 6 அடி நீளமும், 2 கிலோ எடையும் கொண்டது. இதன் அறிவியல் பெயர் நஜா-நஜா.

இதன் விஷம் நியூரோடாக்ஸிக் ஆக இருப்பதால், மனிதர்களின் நரம்பு மண்டலத்தையே முடக்கக்கூடியது” என்று அவர் தெரிவித்தார். பாம்பு கடித்தால் கடுமையான வலி, சுவாச சிரமம், பக்கவாதம் போன்றவை ஏற்பட்டு, சரியான சிகிச்சை ஒரு மணி நேரத்திற்குள் கிடைக்காவிட்டால் மரணமும் நேரலாம் என எச்சரித்தார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, வீட்டு உரிமையாளர் பிரேம் கிஷோர் திவேதி பெருமூச்சு விட்டார். “என் செல்ல நாய்கள் சரியான நேரத்தில் நாகப்பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் பெரிய விபத்து நடந்திருக்கும். அவர்கள் எங்களை எச்சரித்ததோடு மட்டுமல்லாமல், பாம்பு மேலே வராமல் தடுத்தது நம்முடைய உயிரையே காப்பாற்றியது” என்று அவர் உணர்ச்சியுடன் கூறினார். தற்போது சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் வைரலாகி, “நாய்களின் உண்மையான விசுவாசம்” என மக்கள் பாராட்டி வருகின்றனர்.
