பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 10 மில்லியன் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகியதையடுத்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்த இணைப்புகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக எவ்வாறு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதோ அதே போல தற்போதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் சேருவதற்கு முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வீட்டில் எந்த ஒரு எல்பிஜி சிலிண்டர் இல்லாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும். இதற்காக தேவைப்படும் ஆவணங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி ஆதாரம், ரேஷன் கார்டு, பேங்க் பாஸ்புக், குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண் ஆகும்.

இத்திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகிலுள்ள எல்பிஜி விநியோகஸ்தரிடமிருந்து பெற வேண்டும். அல்லது https://www.pmujjwalayojana.com/ என்ற வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து படிவத்தை நிரப்பவும். பின்னர் நிரப்பிய படிவத்தை எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். இதனைத்தொடர்ந்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் விண்ணப்பமும் வழங்கப்பட்ட ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.