தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி வருகிறார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு அவர் டிராக்டர் வழங்கிய நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லனேந்தல் பகுதியில் விவசாயிகளுக்கு டாக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மக்கள் என்னை எம்எல்ஏ மற்றும் முதல்வராக்குவார்கள் என்ற எண்ணத்தில் நான் இந்த உதவிகளை செய்யவில்லை. இது கடவுளுக்கு செய்யும் சேவை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அரசியலில் ஈடுபட வேண்டாம் என என் தாயார் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார். எனக்கும் கொஞ்சம் கூட அரசியல் ஆசை கிடையாது. நான் உதவி செய்வது அரசியலுக்காக கிடையாது. எல்லோரும் அரசியலுக்கு வந்த பிறகுதான் தங்களுடைய கொள்கையை கூறுவார்கள். ஆனால் நான் தற்போதே கூறுகிறேன். அரசியல் வேண்டாம் என்பதுதான் என்னுடைய கொள்கை என்று கூறினார்.