சேலம் மாவட்டத்தில் உள்ள மாரமங்கலத்துப்பட்டி பகுதியில் கோதைநாயகி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலை வாய்ப்பு குறித்த லிங்க் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது குறிப்பிட்ட வேலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி பல்வேறு தவணையாக கோதைநாயகி 13 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தினார். ஆனால் கூறியபடி அவர்கள் வேலைவாய்ப்பு குறித்த தகவல் தரவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோதைநாயகி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.