புதுச்சேரி கோளாஸ் நகரை சேர்ந்த டாக்டர் வெங்கடரமண்யா (36) என்பவர் ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகின்றார். இவரின் ட்விட்டர் கணக்கில் சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்த நபர் டாக்டரிடம் அவரது முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை கேட்டுள்ளார். கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் ட்விட்டரில் இருந்த டாக்டரின் மனைவியின் புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பியுள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

உடனே அதிர்ச்சி அடைந்த வெங்கடரமண்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும் இது போன்ற தெரியாத நபர்களிடம் யாரும் பேச வேண்டாம் எனவும் முடிந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவதை தவிர்க்குமாறும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்