மகாராஷ்டிராவின் மால்வன் தாலுகாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில், நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற 25 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் குதித்தபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரேனிக் மிலிந்த் தக்லே என்ற அந்த இளைஞர், தனது நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் குளத்தின் அருகில் இருந்த மோட்டார் அறை மேற்கூரையின் மீது நின்று நடனமாடியுள்ளார். அப்போது உற்சாகத்தில் நீச்சல் குளத்திற்குள் அவர் குதிக்க, நீரின் ஆழம் குறைவாக இருந்ததால் அவரது தலை குளத்தின் தரையில் பலமாக மோதியுள்ளது.

அவர் தண்ணீருக்கு அடியில் மூழ்கியதைக்கூட கவனிக்காமல், அவரது நண்பர்கள் தொடர்ந்து நடனமாடியது வீடியோவில் பதிவாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர்கள் அவரை மீட்டு மால்வன் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாத் தலங்களில் உள்ள நீச்சல் குளங்களைப் பயன்படுத்தும்போதும், ரீல்ஸ் போன்ற வீடியோக்களை எடுக்கும்போதும் பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கவனிக்கத் தவறுவது இதுபோன்ற பெரும் உயிரிழப்புகளுக்குக் காரணமாகிறது.

“>

 

மகிழ்ச்சியாகக் கொண்டாடச் சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்த விபத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்பும், அங்குள்ள பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.