விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நாகராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாசானம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு நாகராஜ் தனது மனைவியுடன் தகராறு செய்தார். இதனை மாசானத்தின் தந்தை முத்துகுட்டி கண்டித்தார். இதில் கோபமடைந்த நாகராஜ் தனது மனைவியை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து மாசானம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் அடிக்கடி நாகராஜ் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். நேற்று மாசானம் உறவினர் வீட்டிற்கு சென்றபோது முத்துக்குட்டிக்கும் நாகராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முத்துக்குட்டி தனது மருமகனை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.