மும்பையின் வொர்லி பகுதியில் பாஜக நடத்திய அரசியல் பேரணியால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல், அமைச்சருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது.

பாஜகவின் போராட்டத்தால் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கிய நிலையில், தனது குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல வந்த பெண் ஒருவர் கடும் ஆத்திரமடைந்தார்.

காரிலிருந்து இறங்கி நேராகப் பேரணிக்குள் புகுந்த அவர், அங்கிருந்த மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜனைப் பார்த்து, “இங்கிருந்து வெளியே போங்கள், உங்களால் தான் இவ்வளவு டிராபிக் ஜாம் ஏற்படுகிறது” என்று ஆவேசமாகக் கத்தினார்.

அமைச்சர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றபோதும், “உங்களுக்குப் புரியவில்லையா? இங்கே நூற்றுக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அருகில் காலி மைதானம் இருக்கும்போது ஏன் சாலையை மறிக்கிறீர்கள்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளால் அமைச்சரைத் திணறடித்தார்.

அமைச்சரை மட்டுமல்லாமல், இதற்கு அனுமதி அளித்த போலீசாரையும் அந்தப் பெண் கடுமையாகச் சாடினார். இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், “மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அரசியல் பேரணிகள் தேவையா?” என்ற விவாதத்தை இது கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த வீடியோவைப் பகிர்ந்து, ஆளும் அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு சாமானியப் பெண்ணின் இந்தத் துணிச்சலான கேள்வி தற்போது மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.