மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள கோவிந்தவாடி பைபாஸ் சாலையில், டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை இரண்டு பெண்கள் பின்தொடர்ந்து, போலி பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாகப் மிரட்டி ரூ. 10,000 பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடுக்கிடும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

சம்பவத்தன்று, சச்சின் ஷிண்டே என்ற டாக்ஸி ஓட்டுநரை வழிமறித்த அந்த இரண்டு பெண்கள், தங்களை பிவாண்டி என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர். அதற்குத் தான் கோன் கிராமம் வரை மட்டுமே செல்வதாக ஓட்டுநர் கூறியபோதிலும், அந்தப் பெண்கள் வலுக்கட்டாயமாக டாக்ஸியில் ஏறியுள்ளனர்.

காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, திடீரென அந்தப் பெண்கள் ஓட்டுநரிடம் ரூ. 10,000 பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு ஓட்டுநர் பணம் தர மறுத்ததால், கோபமடைந்த அப்பெண்கள் தங்களது ஆடைகளைத் தாங்களே கிழித்துக் கொண்டு, பொய்யான பாலியல் புகார் கொடுத்துக் கைது செய்ய வைப்பதாக மிரட்டிப் பணம் பறிக்க முயன்றுள்ளனர்.

ஆனால், அவர்களின் மிரட்டலுக்குப் பயப்படாத ஓட்டுநர் சச்சின், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து விட்டு, டாக்ஸியை நேரடியாகக் காவல் நிலையத்தை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். துர்காடி பாலத்தைத் தாண்டிய போது எதிரே காவல் வாகனத்தைக் கண்டதும், பயந்துபோன அந்த இரண்டு பெண்களும் ஓடும் டாக்ஸியில் இருந்தே குதித்துத் தப்பி ஓடிவிட்டனர்.

“>

நகரும் டாக்ஸியினுள்ளே அந்தப் பெண்கள் ஓட்டுநரைத் திட்டித் தீர்ப்பதும், தாக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. டாக்ஸி ஓட்டுநர்களைக் குறிவைத்து நடக்கும் இந்த எக்ஸ்டார்ஷன் (Blackmail) மிரட்டல் சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.