ஈரானுடன் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர, அந்த நாட்டின் மீது ஒரு மிகப்பெரிய “இறுதித் தாக்குதலை” நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. போர் நீண்டுகொண்டே செல்வதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் விமர்சனங்களைத் தவிர்க்க பென்டகன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இதன்படி, ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மற்றும் உலக எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியமான அபு மூசா, லாராக் போன்ற தீவுகளைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிடுகிறது. இதற்காக சுமார் 1,000 கடற்படை வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவது அல்லது நேரடியாகத் தரைவழியாக ஊடுருவுவது போன்ற தீவிர நடவடிக்கைகள் ஆலோசிக்கப்படுகின்றன. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து ஈரான் பின்வாங்கினால் அது அந்த நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத் தரும் என்றும், அதன்பின் திரும்பிப் பார்க்க எதுவுமே மிச்சமிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.