புனேவில், 47 வயது நபரை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாக 42 வயது பெண்ணுக்கு எதிராக போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கௌரி பிரஹாத் வாஞ்சலே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரை நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புகாரின்படி, பாதிக்கப்பட்டவர் 2024 நவம்பர் 7 அன்று துல்ஜாபூர் குடும்ப பயணத்தின் போது வாஞ்சலேவை முதன்முதலில் சந்தித்தார். பின்னர், சகோதரி–சகோதரர் உறவு என்ற பெயரில் அவருடன் நெருங்கிய பழக்கம் வளர்த்துக் கொண்டு, அடிக்கடி பாதிக்கப்பட்டவரின் இல்லத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
அதன்பின், காசி விஸ்வநாதருக்கு குடும்பமாக ஒரு சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்துள்ளேன், நீங்கள் ‘சகோதரராக’ என்னுடன் வர வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் மனைவியை நம்ப வைத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் கூறுகையில், பயணத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அவருக்கு போதைப்பொருள் கலந்த பானம் கொடுத்து மயக்கத்தில் வைத்த பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதற்கிடையில் பல தனிப்பட்ட புகைப்படங்களையும் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின், அந்த ஆபாசப் புகைப்படங்களை காட்டி மிரட்டி, மூன்று நாட்கள் பனாரஸில் தங்க கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறினார். புனே திரும்பிய பிறகு, ரூ.2 லட்சம் பணம் கேட்டு, திருமணம் செய்து கொள்வதற்கும் வற்புறுத்தியதாகவும், பணம் கொடுக்காவிட்டால் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்புவேன் என்று மிரட்டியதாகவும் புகார்தாரர் தெரிவித்தார்.
தொடர்ந்து மிரட்டலுக்கு உள்ளான பாதிக்கப்பட்டவர் கோத்ருட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கோத்ருட் போலீஸ் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் சந்தீப் தேஷ்மானே, “வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளோம். பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
