ஜார்ஜியா மாநிலத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

மது மற்றும் விப்பெட்ஸ் எனப்படும் நைட்ரஸ் ஆக்சைடு போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டிய 24 வயது ஜோசப் டில்மேன், மயங்கி கட்டுப்பாட்டை இழந்து, மின்சார சைக்கிளில் சென்ற சக் ஜான்சனை மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் 2024 மார்ச் மாதத்தில் நடந்தது. மோதி விட்டும், டில்மேன் தப்பிச் சென்றதால், ‘ஹிட் அண்ட் ரன்’ வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் டில்மேனுக்கு எதிராக விசாரணை நடைபெற்றபோது, சக் ஜான்சனின் மனைவி ரெஜினா ஜான்சன், குற்றவாளியை அணைத்துக் கொண்டு, “கடவுள் சொன்னார் – அவனுக்கு ஒரு தாயின் அன்பு தேவை” என்று கூறி மன்னிப்பு வழங்கினார். டில்மேன், வாகனக் கொலை, மதுவில் மயங்கி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். மேலும், தண்டனையின் போது போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சை பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

“>

 

இதேவேளை, சம்பவத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டில்மேனுக்கு நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டர்கள் விற்ற காலக்ஸி கேஸ் மற்றும் கிளவுட் 9 ஸ்மோக் ஷாப் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக ரெஜினா வழக்கு தொடுத்துள்ளார். இளைஞர்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்தான பொருட்களை அறிந்தும் விற்றதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கணவரின் உயிரிழப்பை மன்னித்தாலும், நீதிக்காக போராடும் ரெஜினாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கா முழுவதும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.