பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 12-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகப்பு வாங்க முடியாதவர்கள், வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும்  விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதி அன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக பொங்கல் பரிசு தொகையை வாங்க வரும் மக்கள் தனியாக பை கொண்டுவர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மஞ்சள் பையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க முதல்வர் ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.