பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பதக்கம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் தீயணைப்பு காவல்துறை மற்றும் மீட்பு பணித்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பள்ளிகள் துறைகளில் பணியாற்றம் பணியாளர்கள் தங்களது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் காவல்துறையில் காவலர் நிலை-2, காவலர் நிலை-1, ஹவில்தார் தலைமை காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3,000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் முன்னணி தீயணைப் போர் யந்திர கமிட்டி ஒட்டி மற்றும் தீயணைப்போர் போன்ற நிலையங்களில் 118 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல் நிலை வார்டன்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள்  நிலைகளில் 60 பேர்களுக்கும் இந்த பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேற்படி பதக்கங்களை பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடு இல்லாமல் மாதாந்திர பதக்கப்படி ரூ.400, 2023 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

அதே போல் மோப்பநாய் படை பிரிவு, காவல் வானொலி பிரிவு மற்றும் காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு நபர்கள் என மொத்தம் ஆறு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த பதக்கங்களை பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கு தகுந்தவாறு ரொக்க தொகை வழங்கப்படுகிறது. பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள்  இவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.