கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கள்ளாடி பகுதியில் உள்ள  பாலம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு  எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். மண்ணுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நடைபெற்று வரும் ‘மலப்புறம் – வயநாடு சுரங்கப்பாதை திட்டத்திற்காக’ தோண்டி எடுக்கப்பட்ட மண் குவியல், தொடர் மழையால் சரிந்து விழுந்ததே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகும்.

ஜூலை 7 அன்று காலை சுமார் 11:15 மணியளவில் இந்த சுரங்கத்திலிருந்து சேறும் சகதியுமாகப் பாய்ந்து வந்த வெள்ளம், அங்கிருந்த ஒரு பெரிய டாங்கர் லாரியை  அடித்துச் செல்லும் நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அரண்களையும், பெரிய மரங்களையும் வேரோடு சாய்த்துக்கொண்டு வந்த இந்த நிலச்சரிவைத் தொடர்ந்து, காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் ஜேசிபி  இயந்திரங்களின் உதவியுடன் தீவிரமாகப் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 8.17 கிலோமீட்டர் நீளத்தில், 2,100 முதல் 2,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மலப்புறம் மற்றும் வயநாட்டை இணைக்கும் நோக்கில் இந்த சுரங்கப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று கொடூர நிலச்சரிவுகளில் 400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது. இந்திய புவியியல் ஆய்வு மையத்தின்2021-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, கேரளாவின் 43 சதவீதப் பகுதியும், குறிப்பாக வயநாட்டின் 51 சதவீதப் பகுதியும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள ஆபத்தான மலைச்சரிவுகளால் சூழப்பட்டுள்ளன.

அரபிக்கடலில் இருந்து வீசும் பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலையில் மோதி, இங்குள்ள 700 முதல் 2,100 மீட்டர் உயரமுள்ள பீடபூமிகளில் கொட்டித் தீர்க்கும் மாரிக் கால மழையே இந்த தொடர் அவலத்திற்குக் காரணமாகும். நிலச்சரிவு ஏற்படும் போதெல்லாம் காபினி நதியின் துணை நதியான ‘மானந்தவாடி’ ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றியுள்ள கிராமங்களை நிலைகுலைய வைப்பது தொடர்கதையாகி வருகிறது.